மந்திரம் சொல்லி ரூ11-க்கு மருந்து விற்பனை: கம்பி எண்ணும் ‘கொரோனா’ பாபா

வாரணாசி: மந்திரம் சொல்லி 11 ரூபாய்க்கு மருந்து விற்பனை செய்த ‘கொரோனா’ பாபா என்பவரை உத்தரபிரதேச போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.  உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி அடுத்த லங்கா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாம்நேகட்டில் வசிக்கும் ஜோதிடர் சஞ்சய் திவாரி என்பவர், ‘கொரோனா பாபா’ என்று கடந்த சில நாட்களாக அழைக்கப்பட்டு வந்தார். இவர், துண்டுப்பிரசுரங்கள் மூலம், குறிப்பிட்ட ‘மந்திரம்’ சொன்னால் கொரோனா வைரசிலிருந்து விடுபடுவதோடு தொற்றுநோயைத் தடுக்க முடியும் என்று விளம்பரம் செய்து வந்தார்.

அந்த துண்டு பிரசுரத்தில் அவரது மொபைல் எண்ணையும் வெளியிட்டார். துண்டு பிரசுரங்களின் படங்கள் சமூக ஊடகங்களில் வைரலானதால், லங்கா போலீசார் அதிரடியில் இறங்கினர். இதுகுறித்து லங்கா இன்ஸ்பெக்டர் (குற்றம்) மோஹித் யாதவ் கூறுகையில், “திவாரி தனது சாம்நேகாட் வீட்டில் கைது செய்யப்பட்டார். பொது ஒழுங்கை சீர்குலைத்தல் மற்றும் தவறான தகவல்களை பரப்பியதற்காக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்பகுதியில் ‘கொரோனா பாபா’ என்று அழைக்கப்படும் இவர், கொரோனா வைரஸ் தடுப்புக்காக 11 ரூபாய்க்கு மருந்து விற்றுள்ளார். தற்போது அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்’ என்றார்.

Related Stories: