விருதுநகர்: விருதுநகர் பர்மா காலனியில் வீடுகளுக்கு அமைக்கப்பட்ட பாதாளச்சாக்கடை இணைப்பு தொட்டியின் மூடிகள் ஒரு வாரத்திலேயே உடைந்து கம்பிகள் மட்டுமே மிஞ்சியுள்ளதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். விருதுநகர் பாதாளாச்சாக்கடை பணிகள் 14 ஆண்டுகள் நிறைவேறாமல் ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. நகரில் உள்ள 18 ஆயிரம் வீட்டு இணைப்புகளில் சுமார் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இணைப்புகளை மக்கள் மூலம் ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டன. இந்நிலையில் 12 ஆயிரம் வீட்டு இணைப்புகளுக்கு இணைப்பு வழங்க ரூ.6 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதை ஒப்பந்தம் எடுத்து நிறுவனம் வேலையை செய்யாமல் வேறு ஒப்பந்தாரர்கள் மூலம் பணிகளை மேற்கொண்டு வருகிறது. விருதுநகர் பர்மா காலனியில் இருந்த சாலைகளை அகற்றி பேவர்பிளாக் ரோடு போடப்பட்டன. அப்போது பாதாளச்சாக்கடை வீட்டு இணைப்புகள் வழங்கப்பட்டன.