×

கலவரம், வன்முறையால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு டெல்லியில் அமைதி: 144 தடை உத்தரவு தொடர்கிறது: ஓடிய மக்கள் வீடு திரும்புகின்றனர்: 50 கம்பெனி துணை ராணுவம் ரோந்து

புதுடெல்லி: டெல்லி வடகிழக்கில் தொடரும் 144 தடை உத்தரவின் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக புதிதாக எந்த வன்முறையும் ஏற்படவில்லை. இதனால், நேற்று அப்பகுதியில்  மையான அமைதியாக காணப்பட்டது.மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்தும், எதிர்த்தும் டெல்லி வடகிழக்கு பகுதியில் நடந்த போராட்டத்தில் மோதல் ஏற்பட்டு, அது மிகப்பெரிய கலவரமாக மாறியது. குறிப்பாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மோதிக் கொண்ட இரு தரப்பினரும் கல்வீச்சு, தீவைப்பு, துப்பாக்கிச்சூடு போன்ற வன்முறையில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அடுத்தடுத்து திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களிலும் வடகிழக்கின் பல இடங்களில் வன்முறை நீடித்தது. இதனால் நூற்றுக்கணக்கான வீடுகள், கடைகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. 300க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள், கார்கள் சேதப்படுத்தப்பட்டு எரித்து நாசம் செய்யப்பட்டன. மேலும் நடந்த வன்முறையில் 300க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளனர்.

அவர்களில் 265 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கலவரத்தில் 2 போலீஸ்காரர்கள் உள்பட மொத்தம் 42 பேர் தற்போது வரை உயிரிழந்துள்ளனர்.  துப்பாக்கி குண்டு காயம் அடைந்தவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.மேலும், கலவரத்தின் போது அடித்து கொல்லப்பட்டவர்களில் பலரது உடல் சாக்கடை கால்வாய்களில் வீசப்பட்டு இருந்தது. அவை அனைத்தையும் கடந்த 2 நாட்களாக மீட்கப்பட்டன.  வேறு எங்காவது மேலும் உடல்கள் வீசப்பட்டுள்ளதா? என்று வடகிழக்கு டெல்லி சாக்கடை கால்வாய்களில் போலீசார் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  வன்முறைகள் பரவுவதை தடுக்க, டெல்லி வடகிழக்கு பகுதியில் 144 தடை உத்தரவு முழுமையாக அமல்படுத்தப்பட்டு உள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை) மட்டும் 10 மணி நேரத்துக்கு இந்த உத்தரவு தளர்த்தப்பட்டது.  

மேலும், 144 தடை உத்தரவை மீறி தெருக்களில் குழுக்களாக திரண்டு வந்தாலோ அல்லது வன்முறையில் ஈடுபட்டாலோ கண்டதும் சுடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால், கடந்த 2 நாட்களாக புதிதாக எந்த வன்முறையும் ஏற்படவில்லை. டெல்லி வடகிழக்கு பகுதியில் மயான அமைதி நிலவுகிறது.  கலவரம் முழுமையாக ஒய்ந்துள்ளதால், வீடுகளை விட்டு ஓடிய மக்கள் திரும்பத் தொடங்கியுள்ளனர்.

* டெல்லியில் கலவரம், வன்முறை ஏற்பட்ட பகுதிகளில். 50 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கடந்த மூன்று நாட்களாக தீவிர ரோந்து, கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லி போலீசாரும் அவர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றனர்.
* வடகிழக்கு பகுதியில் கலவரம், வன்முறை தொடர்பாக இதுவரை 48 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 150-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
* தலைமறைவான குற்றவாளிகளை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
* முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 400 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காங். குழு அமைப்பு
வடகிழக்கு டெல்லியில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் நேரில் ஆய்வு செய்ய 5 பேர் கொண்ட குழுவை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நியமித்துள்ளார். அக்குழுவில், கட்சியின் பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக், டெல்லி பொறுப்பாளர் சக்திசிங் கோஹில், அரியானா காங்கிரஸ் கமிட்டி தலைவர் குமாரி செல்ஜா, முன்னாள் எம்பி தாரிக் அன்வர் மற்றும் மகிளா காங்கிரஸ் தலைவர் சுஷ்மிதா தேவ் இடம் பெற்றுள்ளனர். இக்குழுவினர் பாதிக்கப்பட்ட பகுதியில் ஆய்வு நடத்தி விரிவான அறிக்கையை உடனடியாக தாக்கல் செய்ய வேண்டுமென சோனியா உத்தரவிட்டுள்ளார்.




Tags : Northeast Delhi ,home ,Company , Riot, violence, northeastern Delhi, 144 injunction, paramilitary
× RELATED வாக்களிக்க வந்தபோது ‘இந்திய நாடு என் வீடு’- பாடலை பாடினார் நடிகர் வடிவேலு