அறிவியல் துறையில் பெண்கள் குறைவு: ஜனாதிபதி கோவிந்த் கவலை

புதுடெல்லி: பிரபல இயற்பியல் விஞ்ஞானி சர்.சி.வி.ராமன் `ராமன் விளைவை’ கண்டுபிடித்ததன் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 28ம் தேதி, ‘தேசிய அறிவியல் தினம்’ என கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, டெல்லியில் நடந்த  நிகழ்ச்சியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேசியதாவது:  செவ்வாய் கிரகத்துக்கு இஸ்ரோ அனுப்பிய மங்கல்யான் விண்கல திட்டத்தில், பெண் விஞ்ஞானிகள் மிக முக்கியமான பங்காற்றினர். பெண் விஞ்ஞானிகள் அதிகளவு இருந்த போதிலும் இந்தியாவில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளில் ஈடுபடும் பணியாளர்களில் வெறும் 15 சதவீதம் மட்டுமே பெண்கள் உள்ளனர். உலகளவில் இந்த அளவு 30 சதவீதமாக இருக்கும் நிலையில், இந்தியாவில் குறைவாக இருப்பது கவலை அளிக்கிறது.மிக குறைந்த பெண்களே அறிவியலில் உயர் கல்வி கற்று, வெற்றிகரமாக முடிக்கின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.

விஞ்ஞானிகளுக்கு மோடி வாழ்த்து

தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘விஞ்ஞானிகளின் புதுமையான ஆர்வமும், ஆராய்ச்சியும் இந்தியா மற்றும் உலகிற்கு உதவியுள்ளது. இந்திய விஞ்ஞானம் தொடர்ந்து செழித்து வளரட்டும். நமது இளம் மனங்கள் அறிவியலை குறித்து இன்னும் அதிக ஆர்வத்தை வளர்த்து கொள்ளட்டும். தேசிய அறிவியல் தினம் என்பது விஞ்ஞானிகளின் திறமை, உறுதியை போற்றி வணங்குவதற்கான ஒரு சந்தர்ப்பம். அவர்களுக்கு வணக்கம் செலுத்துகிறேன்,’ என கூறியுள்ளார்.

Related Stories: