புதுடெல்லி: லஞ்சம் பெற்ற வழக்கில் சிபிஐ முன்னாள் சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தனாவிற்கு எதிராக வலுவான ஆதாரம் உள்ளதாக டெல்லி நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சிபிஐ சிறப்பு இயக்குனராக ராகேஷ் அஸ்தனா பதவி வகித்தபோது, சர்ச்சைக்குரிய இறைச்சி ஏற்றுமதியாளர் மொயின் குரோசியை ஒரு வழக்கில் இருந்து விடுவிப்பதற்காக லஞ்சம் வாங்கியதாக ஐதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் சதீஷ் சனா என்பவர் புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இதனை தொடர்ந்து கடந்த 2018ம் ஆண்டு அஸ்தனாவும், டிஎஸ்பி தேவந்தர் குமாரும் சிபிஐ.யால் கைது செய்யப்பட்டனர். பின்னர் இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். கடந்த 12ம் தேதி டெல்லி நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சிபிஐ.யின் விசாரணைஅதிருப்தி தருவதாக நீதிமன்றம் தெரிவித்தது.