×

இலங்கையில் இருந்து கடத்தி வந்த 71.86 லட்சம் தங்கம் பறிமுதல்: 6 பேர் கைது

சென்னை: இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட 71.86 லட்சம் மதிப்புள்ள 1.63 கிலோ தங்க கட்டிகளை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக கடத்தல் ஆசாமிகள் 6 பேரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இலங்கையில் இருந்து நேற்று அதிகாலை 3.30 மணிக்கு லங்கன் ஏர்லைன்ஸ்  விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது புதுக்கோட்டையை சேர்ந்த அகமது கனி (32), சென்னையை சேர்ந்த தமிம் அன்சாரி (20), மதுரையை சேர்ந்த ரகுமான் கான் (22) ஆகிய 3 பேர் ஒரு குழுவாக  இலங்கைக்கு சென்றுவிட்டு, இந்த விமானத்தில் சென்னை திரும்பி வந்தனர். அதிகாரிகள் அவர்களை பரிசோதித்த போது 3 பேரின் உள்ளாடைக்குள் 766 கிராம் தங்க கட்டிகள் மறைத்து கடத்தி வந்தது தெரிந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 33.63 லட்சம். அவர்களை சுங்க அதிகாரிகள் கைது செய்து செய்தனர்.
 
இதே விமானத்தில் இலங்கையை சேர்ந்த முகமது நஸ்தீன் (20), ராமநாதபுரத்தை சேர்ந்த அப்துல்லா (38) ஆகிய 2 பேர் சென்னை வந்தனர். இவர்களை பரிசோதித்தபோது உள்ளாடைக்குள் 570 கிராம் தங்கம் கடத்தி வந்தது தெரிந்தது. அவற்றை கைபற்றினர். இதன் மதிப்பு 25.4 லட்சம். அதே விமானத்தில் வந்த சென்னையை சேர்ந்த அல்பீர் அலி (37) என்பவரை பரிசோதித்த போது, அவரது உள்ளாடைக்குள் இருந்து  300 கிராம்  தங்கம் கடத்தி வந்தது தெரிந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு  12.86 லட்சம். மொத்தம் 6 பேரிடம் இருந்து 1.63 கிலோ தங்க கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மொத்த மதிப்பு 71.86 லட்சம் ஆகும். கைது செய்யப்பட்ட 6 பேரிடமும் சுங்க அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Tags : Sri Lanka , Sri Lanka, gold seized, 6 arrested
× RELATED இலங்கைக்கு கடத்தப்பட்ட பீடி இலைகள் படகுடன் பறிமுதல்