கப்பல் பழுதுபார்க்கும் தளம் அருகே தலையில் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடியவர் மீட்பு

தண்டையார்பேட்டை: காசிமேடு மீன்பிடி துறைமுகம் கப்பல் பழுதுபார்க்கும் தளம் அருகே தலையில் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய வாலிபரை போலீசார் மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.  காசிமேடு மீன்பிடி துறைமுகத்தின் கப்பல் பழுதுபார்க்கும் தளம் அருகே வாலிபர் ஒருவர் தலையில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடப்பதாக காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசாருக்கு நேற்று தகவல் வந்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த  வாலிபரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். விசாரணையில், அவர் திருவொற்றியூர் நேதாஜி நகர் சுவாமி குடியிருப்பை சேர்ந்த சாமுவேல்  (22) என்பதும், கப்பல் பழுது பார்க்கும் வேலை செய்து வந்ததாக தெரியவந்தது.  குடிபோதையில் தகராறு ஏற்பட்டு அதனால் இந்த சம்பவம் நடைபெற்றதா அல்லது முன்விரோதம் காரணமா இந்த சம்பவம் நடைபெற்றதா  என்பது குறித்து காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: