சென்னை: பார்க்கிங் வேலைக்கு இன்ஜினியரிங் முடித்த பட்டதாரிகள் குவிந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சாலையோர வாகன நிறுத்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தின் படி சென்னையில் சாலையோரங்களில் வாகனத்தை நிறுத்துவதற்கு கட்டணம் வசூலிக்கும் முறை ஒரு சில மாதங்களில் அமல்படுத்தப்பட உள்ளது. முதற்கட்டமாக 80 இடங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதன்படி அண்ணாநகர், பெசன்ட் நகர், புரசைவாக்கம், தி.நகர், காதர் நவாஸ்கான் சாலை, வாலாஜா சாலை, மெரினா உள்ளிட்ட 15 பகுதிகளில் 4375 கார்களை நிறுத்தும் அளவிற்கான இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் 20 சதவீத இடங்கள் இருசக்கர வாகனங்களுக்கும் 5 சதவீத இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான வாகனங்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவற்றை கண்காணிக்க 460 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.