சென்னை: ஊத்துக்கோட்டை அருகே ஆரணி குடோனில் 15 லட்சம் மதிப்புள்ள குட்கா, வேனுடன் பறிமுதல் செய்து, 5 பேரை போலீசார் கைது செய்தனர். ஊத்துக்கோட்டை பெரியபாளையம் அருகே ஆரணி பேரூராட்சி பகுதியில் தனியார் ஒருவருக்கு சொந்தமான குடோனில் குட்கா பதுக்கி வைத்திருப்பதாக திருவள்ளூர் மாவட்ட எஸ்பி அரவிந்தனுக்கு தகவல் கிடைத்தது. அவரது, உத்தரவின்பேரில் ஊத்துக்கோட்டை டிஎஸ்பி சந்திரதாசன் மேற்பார்வையில் ஆரணி எஸ்.ஐ கிருஷ்ணராஜ், ஏட்டுகள் தியாகு, பரந்தாமன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ஆரணி பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, நித்தியானந்தம் என்பவருக்கு சொந்தமான குடோனில் இருந்து வெளியூர்களுக்கு எடுத்து செல்ல மினி வேனில் குட்கா பொருட்களை ஏற்றிக் கொண்டு இருந்தது தெரிய வந்தது, குட்கா மூட்டைகளையும், வேனையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.