ஊட்டி: ஊட்டி மலை ரயில் கட்டணம் மீண்டும் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. கோவை மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரையில் நீராவி இன்ஜின் பொருத்திய மலை ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் பயணிக்க சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். மேலும், ஊட்டி-குன்னூர் இடையே இந்த ரயிலில் உள்ளூர் மக்கள் பலரும் பயணிக்கின்றனர். இதுவரையில் மலை ரயிலில் குறைந்த கட்டணமே வசூலிக்கப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு திடீரென மலை ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டது. ஊட்டி-குன்னூர் இடையே ரூ.10 மட்டுமே வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், இந்த கட்டணம் உயர்த்தப்பட்டு ரூ.35 ஆக மாறியது.
மேலும், ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு இந்த ரயிலில் பயணிக்க ரூ.75ம் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், மீண்டும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், இனிமேல் ஆன்லைன் மூலம்தான் முன்பதிவு மாற்றப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டணம் வரும் மார்ச் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என கூறப்படுகிறது.
தற்போது உயர்த்தப்பட்டுள்ளதாக கூறப்படும் கட்டணத்தின்படி இதுவரை குன்னூருக்கு ரூ.35 மட்டுமே செலுத்தி வந்த பயணிகள் இனி ரூ.150 செலுத்த வேண்டும். அதேபோல், மேட்டுப்பாளையத்திற்கு ரூ.350 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த கட்டண உயர்வால், சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி, உள்ளூர் மக்களும் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.