2 எம்எல்ஏக்கள் மறைவு: திமுக எம்பிக்கள் கூட்டம் ரத்து: பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவிப்பு

சென்னை: சென்னையில் நாளை நடைபெறுவதாக இருந்த திமுக எம்பிக்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார்.  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நாளை (29ம் தேதி) சனிக்கிழமை காலை 10 மணிக்கு, சென்னை, அண்ணா அறிவாலயம், முரசொலி மாறன் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில்  நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதில், திமுக மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.

இந்நிலையில், நேற்று முன்தினம் (பிப்ரவரி 27ம் தேதி) திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏவுமான கே.பி.பி.சாமி உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். 28ம் தேதி மற்றொரு திமுக எம்எல்ஏவான காத்தவராயன்  உடல்நலக்குறைவினால் உயிரிழந்துள்ளார். இதனால் முன்னதாக சென்னையில் நடைபெறுவதாக இருந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் 29.2.2020 காலை 10 மணிக்கு சென்னை, அண்ணா  அறிவாலயத்தில் ‘முரசொலி மாறன் வளாகத்தில்’ உள்ள கூட்ட அரங்கில் நடைபெறுவதாக இருந்த கூட்டம் தவிர்க்க முடியாத காரணத்தால் ஒத்தி வைக்கப்படுகிறது. கூட்டம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்’ எனக்கூறப்பட்டுள்ளது.

Related Stories: