×

வடகிழக்கு டெல்லி கலவரம்: பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் கண்டு அறிக்கை தர 5 பேர் கொண்ட குழுவை அமைத்தது காங்கிரஸ்!

புதுடெல்லி: வடகிழக்கு டெல்லியில் நடந்த கலவரம் குறித்து நேரில் கண்டு அறிக்கை தர 5 பேர் கொண்ட குழுவை காங்கிரஸ் கட்சி அமைத்துள்ளது. டெல்லி வடகிழக்கு பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து ஒரு சாரார் ஊர்வலம் நடத்தினார்கள். இதற்கு அந்த பகுதி முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அந்த மோதல் மிகப்பெரிய கலவரமாக வெடித்தது. வீடுகள், கடைகள் மற்றும் பொது சொத்துக்களுக்கு தீவைக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான வீடுகள், வாகனங்கள் எரிக்கப்பட்டன. சரமாரியாக கல்வீச்சு சம்பவங்களும் நடந்தன.

சில இடங்களில் கலவரக்காரர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதனால் வடகிழக்கு டெல்லியில் கலவரமும், பதட்டமும் மேலும் அதிகரித்தது. அடுத்த 2 நாட்களும் (திங்கட்கிழமை, செவ்வாய்க்கிழமை) கலவரம் நீடித்தது. கலவரத்தில் 210க்கும் மேற்பட்டவர்கள் காயம்டைந்தனர். அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காயம் அடைந்தவர்களில் 30 சதவீதம் பேர் குண்டு காயம் அடைந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. அவர்களில் சிலர் சிகிச்சை பலனின்றி நேற்றும், இன்று காலையிலும் உயிரிழந்தனர். இதனால் டெல்லி கலவர பலி உயர்ந்தபடி உள்ளது. தற்போதைய நிலவரப்படி கலவரத்துக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 42 ஆக உள்ளது.

இந்த நிலையில், வடகிழக்கு டெல்லியில் நடந்த கலவரம் குறித்து நேரில் கண்டு அறிக்கை தர 5 பேர் கொண்ட குழுவை காங்கிரஸ் கட்சி அமைத்துள்ளது. காங்கிரஸ் பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக், டெல்லி காங்கிரஸ் தலைவர் சக்திசிங் கோஹில், ஹரியானா காங்கிரஸ் தலைவர் குமாரி செல்ஜா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தாரிக் அன்வர், மஹிலா காங்கிரஸ் தலைவர் சுஷ்மிதா தேவ் ஆகியோர் இந்த குழுவில் இடமபெற்றுள்ளனர். இந்த குழுவினர் டெல்லியில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் கண்டு, அங்குள்ள நிலைமை குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் விரிவான அறிக்கையை தாக்கல் செய்வார்கள், என அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Tags : Northeast Delhi ,Congress ,panel ,areas ,visit ,Sonia Gandhi , Delhi, CAA, Riot, Congress, fact-finding panel, Sonia Gandhi
× RELATED புதுச்சேரியில் வாக்குப்பதிவு...