சிதம்பரம்: சிதம்பரம் அருகே உள்ள சுற்று வட்டார கிராமங்களில் சாமந்தி பூக்கள் அதிக அளவில் பயிரிடப்பட்டுள்ளன. பூக்களின் தேவை அதிகரித்து வருவதால் உள்ளூரில் பூக்கும் பூக்கள் மக்களின் தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை.
இதனால் சேலம், பெங்களூர் போன்ற நகரங்களில் இருந்து சிதம்பரத்திற்கு தினமும் பூக்கள் இறக்குமதி செய்யப்படுகிறது. இந்நிலையில்தான் சிதம்பரம் சுற்று வட்டார கிராமங்களில் சாமந்திப் பூக்கள் அதிக அளவில் பயிரிடப்பட்டு உள்ளது.
சிதம்பரம் அருகே உள்ள ஜெயங்கொண்டபட்டினம், திட்டுக்காட்டூர், பெராம்பட்டு, சிவபுரி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சாமந்திப் பூக்கள் விளைச்சல் அதிகரித்து உள்ளது. இந்த பகுதிகளில் சாமந்தி பயிரிட்ட விவசாயிகள் அந்த செடிகளை பாதுகாப்பாக பராமரித்து, வளர்த்து வருகின்றனர். இதனால் சாமந்தி பூக்கள் அதிகளவில் பூத்து குலுங்குகிறது. சாமந்தி பூக்கள் அதிகம் பூத்திருப்பதால் இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.