சேலம் அருகே நடந்த கொலையில் திருப்பம் கேரள பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்து கல்லால் தாக்கி கொன்றனர்

இளம்பிள்ளை: இளம்பிள்ளை அருகே கல்லால் தாக்கி கேரள இளம் பெண் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், அவர் கற்பழித்து கொலை செய்யபட்டது பிரேத பரிசோதனை அறிக்கையில் அம்பலமானது தெரிய வந்தது. இது தொடர்பாக 3 பேரை போலீசார் பிடித்த விசாரித்து வருகின்றனர். சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகேயுள்ள தப்பக்குட்டை கிராமம் பூசாரி காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் ஞானசுந்தரம் (44). ஆட்டோ டிரைவர். இவர் கேரளாவை சேர்ந்த பீனா (31) என்பவரை கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 11, 9 வயதுகளில் இரு பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். ஆட்டோ டிரைவ ராக இருந்த ஞானசுந்தரம், கடந்த 5 வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார். இதனையடுத்து குழந்தைகளுடன் மாமியார் வீட்டில் பீனா வசித்து வந்தார். இவர் சீரகாபாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் துப்புரவு பணியாளராக வேலை செய்து வந்தார்.

 இந்நிலையில் நேற்று முன்தினம் பீனா அவரது வீட்டிற்கு அருகே உள்ள ஏரி பகுதி விவசாய நிலத்தில் கல்லால் தாக்கி கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்த தகவலின் பேரில், சங்ககிரி டி.எஸ்.பி தங்கவேல், மகுடஞ்சாவடி இன்ஸ்பெக்டர் (பொ) சண்முகசுந்தரம், எஸ்.ஐ.பெரியசாமி போலீசார் பார்வையிட்டு, பீனாவின், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்டு கிடந்த பீனாவிற்கு ஒரு வாலிபருடன் தொடர்பு இருந்தது. இதை தொடர்ந்து அந்த நபரை நேற்று முன்தினம் போலீசார் பிடித்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் நேற்று பீனாவின் பிரேத பரிசோதனை அறிக்கை மகுடஞ்சாவடி போலீசாருக்கு கிடைத்தது. அதில் அப்பெண் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில், நேற்று மாலை அதே பகுதியை சேர்ந்த சுமார் 21 வயது மற்றும் 19, 20 வயது வாலிபர்கள் இந்த கொலையில் சம்பந்தப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதை தொடர்ந்து அந்த 3 வாலிபர்களையும் போலீசார் பிடித்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதே போல் பெண் கொலையான அன்று செல்போன் ஒன்று அங்குள்ள ஏரியில் வீசியது தெரிய வந்துள்ளது. போலீசாரிடம் பிடிபட்ட 3 வாலிபர்களின் செல்போன்களை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இவர்கள் 4 பேரும் சேர்ந்து கேரள பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்திருக்கலாம் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: