கொரோனா வைரஸ் தாக்கம் எதிரொலி தூத்துக்குடி துறைமுகம் வந்த ஹாங்காங் கப்பல் நிறுத்தி வைப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்த ஹாங்காங் ஆயில் டேங்கர் கப்பல் எம்டி ஹன்னா கடலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கப்பலில் சுகாதார துறையினர் தீவிர மருத்துவ பரிசோதனை நடத்தினர். தற்போது உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக தூத்துக்குடி துறைமுகம் வரும் அனைத்து கப்பல்களின் ஊழியர்களுக்கும் சுகாதார துறையினர் பல்வேறு பரிசோதனைகள் செய்த பின்னரே கப்பல்கள் சரக்கு தளத்திற்கு வர அனுமதிக்கப்படுகின்றன.

இந்நிலையில் தூத்துக்குடி துறைமுகத்திற்கு ஹாங்காங்கில் பதிவு செய்யப்பட்ட எம்டி ஹன்னா என்ற ஆயில் டேங்கர் கப்பல் வந்துள்ளது. இந்தோனேசிய தீவான பாடம் துறைமுகத்தில் இருந்து வந்த இந்த கப்பலில் மாலுமிகள் உள்பட 21 பேர் இருந்துள்ளனர்.

இந்த கப்பல் நேற்று துறைமுகத்தின் 2வது தளத்திற்கு வருவதற்காக கடந்த 26ம்தேதி இரவு முதலே வெளித் துறைமுகத்தில் காத்திருந்தது. இதையடுத்து நேற்று துறைமுக மருத்துவகுழு  மாலை வரை கப்பலில் ஆய்வு மேற்கொண்டனர்.

மருத்துவ அதிகாரிகளின் சான்று அளித்த பின்னரே அந்த கப்பல் துறைமுகத்தின் 2வது தளத்திற்கு செல்ல அனுமதிக்கப்படும் என்று தெரிகிறது. அந்த கப்பலில் உள்ளவர்களுக்கு கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் ஏதும் இல்லை என உறுதியாக தெரிந்தாலும், 8 ஆயிரம் மெட்ரிக் டன் எடையிலான பாமாயிலை இறக்கும் வரையில் கப்பலை விட்டு ஊழியர்கள் யாரும் துறைமுகத்தில் இருந்து வெளியே செல்ல அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து துறைமுக அதிகாரிகள் கூறுகையில், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக துறைமுகத்திற்கு வரும் அனைத்து கப்பல்களும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு கொரோனா தொற்று இல்லை என்று தெரிந்த பின்னரே துறைமுகத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகிறது. கொரோனோ தாக்கம் உள்ள நாடுகளில் இருந்து தூத்துக்குடி வரும் எல்லா கப்பலும் தீவிர மருத்துவ பரிசோதனைக்கு பின்னரே துறைமுகத்திற்கு அனுமதிக்கப்படுகிறது என்றனர்.

Related Stories: