சென்னை: உள்நாட்டு வெங்காய உற்பத்தி சீரடைந்துவிட்டதால் சென்னை கோயம்பேடு சந்தையில் இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயங்கள் வாங்க ஆளின்றி குப்பையில் வீசப்பட்டிருக்கின்றது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாடு முழுவதும் வெங்காய தட்டுப்பாடு ஏற்பட்டதால் சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயத்தின் விலை மளமளவென உயர்ந்து, பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதையடுத்து, எகிப்து, துருக்கி, சீனா ஆகிய நாடுகளில் இருந்து வெங்காயத்தை மத்திய அரசு இறக்குமதி செய்தது. அதேபோல தனியார் நிறுவனங்களும் வெங்காயத்தை இறக்குமதி செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. தற்போது உள்நாட்டில் வெங்காய உற்பத்தி வழக்கமான அளவுக்கு திரும்பி விட்டாலும், வெளிநாடுகளில் இருந்து வெங்காய இறக்குமதி செய்வது தொடர்கிறது.