ஊதிய உயர்வு கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்களின் பணிமாறுதல் ரத்து: ஐகோர்ட் அதிரடி!

சென்னை: ஊதிய உயர்வு கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்களின் பணிமாறுதல் ரத்து செய்யப்பட்டுள்ளது. மருத்துவர்களின் பணிமாறுதலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் மாதம் 25ம் தேதி முதல் 5 நாட்கள் அரசு மருத்துவர்கள் தமிழகம் முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக ஊதிய உயர்வு மற்றும் பணியிடமாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் சுகாதாரத்துறை உள்ளிட்ட அதிகாரிகள் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இப்போராட்டத்தில் அரசின் பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்தது. இதனை தொடர்ந்து பல அரசியல் கட்சி தலைவர்களும் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர். இந்த நிலையில் இறுதியாக பேச்சுவார்த்தை நடைபெற்று, மருத்துவர்களின் போராட்டம் கைவிடப்பட்டது.

இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களை இடமாற்றம் செய்து, ஒழுங்கு நடவடிக்கை சம்மன் அனுப்பி சுகாதாரத்துறை உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மருத்துவர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் வழக்கு தொடர்ந்திருந்தனர். இது உள்நோக்கத்துடன் கொடுக்கப்பட்டிருக்கிறது. போராடுவது எங்களின் உரிமை. பல்வேறு முறை இது தொடர்பாக கோரிக்கை வைத்தும் அரசு நிறைவேற்றாத காரணத்தினால் தான் தாங்கள் போராட்டத்தில் இ ஈடுபட்டோம் என்று வாதம் முன்வைக்கப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் முன்பு நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் ஒரு பரபரப்பான தீர்ப்பை நீதிபதி வழங்கி உத்தரவிட்டுள்ளார். அதாவது அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்துவதற்கு உரிமை இல்லை என்று தெரிவித்திருக்கிறார். அதே வேளையில் அவர்களுக்கு வழங்கப்பட்ட பணியிடமாறுதலை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: