சென்னை: ஊதிய உயர்வு கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்களின் பணிமாறுதல் ரத்து செய்யப்பட்டுள்ளது. மருத்துவர்களின் பணிமாறுதலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் மாதம் 25ம் தேதி முதல் 5 நாட்கள் அரசு மருத்துவர்கள் தமிழகம் முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக ஊதிய உயர்வு மற்றும் பணியிடமாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் சுகாதாரத்துறை உள்ளிட்ட அதிகாரிகள் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இப்போராட்டத்தில் அரசின் பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்தது. இதனை தொடர்ந்து பல அரசியல் கட்சி தலைவர்களும் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர். இந்த நிலையில் இறுதியாக பேச்சுவார்த்தை நடைபெற்று, மருத்துவர்களின் போராட்டம் கைவிடப்பட்டது.