செல்போனில் பேசியபடி சென்றபோது மின்சார ரயில் மோதி வாலிபர் பரிதாப பலி: எழும்பூரில் பரபரப்பு

சென்னை: எழும்பூர் ரயில் நிலைய நடைமேடையில் செல்போனில் பேசியபடி சென்றபோது மின்சார ரயில் மோதி வாலிபர் பலியானார்.  மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அழகர்சாமி நகரை சேர்ந்தவர் பவளக்கொடி. பூந்தமல்லியில் தங்கி, செங்கல் சூளையில் குடும்பத்துடன் வேலை செய்து வருகிறார். இவரது மகன் ஜெயராமன் (21), விஜயவாடாவில் உள்ள ஒரு மிட்டாய் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.இவர், கடந்த 2 நாட்களுக்கு முன், பெற்றோரை பார்க்க சென்னை வந்துள்ளார். பின்னர், நேற்று முன்தினம் மதுரை செல்வதற்காக எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வந்து டிக்கெட் எடுத்துவிட்டு, செல்போனில் பேசியபடி, 11வது நடைமேடையில் தண்டவாளத்தை ஒட்டியபடி நடந்து சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி வந்த மின்சார ரயில் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு தண்டவாளத்தில் விழுந்த அவர், உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த எழும்பூர் ரயில்வே போலீசார், ஜெயராமன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: