தண்டையார்பேட்டை: பணம் வராத ஆத்திரத்தில் ஏடிஎம் மெஷினை உடைக்க முயன்ற வாலிபர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை பூக்கடை, ரத்தன் பஜார் பகுதியில் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் மையம் உள்ளது. கடந்த 2 தினங்களுக்கு முன் இரவில், இந்த ஏடிஎம் மெஷினை உடைக்கும் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். பொதுமக்களை பார்த்ததும் அங்கிருந்த 2 வாலிபர்கள் ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து பூக்கடை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ஏடிஎம் மையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவை ஆய்வு செய்தனர். அப்போது, 2 வாலிபர்கள் ஏடிஎம் கண்ணாடியை கைகளால் அடித்து உடைப்பது பதிவாகி இருந்தது.