பெங்களூரு: கே.ஆர்.எஸ். அணையில் இருந்து ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களுக்கு திறக்க வேண்டிய தண்ணீரை தமிழகத்திற்கு கர்நாடகா திறந்து விட்டுள்ளது.கர்நாடகா-தமிழக விவசாயிகளின் ஜீவநாடியாக இருக்கும் காவிரி நதியில் இருந்து கிடைக்கும் தண்ணீரை பங்கிட்டு கொள்ளும் விஷயத்தில் இரு மாநிலங்கள் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. நதிநீர் பங்கீடு பிரச்னைக்கு தீர்வு காண அமைக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றம், கடந்த 2007ம் ஆண்டு வழங்கிய தீர்ப்பில் தமிழகத்திற்கு 191.50 டிஎம்சி தண்ணீர் ஆண்டுதோறும் திறக்க வேண்டும் என்று கூறியிருந்தது. நடுவர் மன்ற தீர்ப்பை எதிர்த்து இரு மாநில அரசுகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அம்மனு மீதான விசாரணை முடிந்து கடந்த 2018 பிப்ரவரி 16ம் தேதி வழங்கிய தீர்ப்பில் தமிழகத்திற்கு நடுவர் மன்றம் வழங்க உத்தரவிட்டிருந்த தண்ணீரில் 14.75 டிஎம்சி குறைத்து ஆண்டுதோறும் 176.75 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்.