திருவனந்தபுரம்: கேரள மாநில போலீஸ் ஆயுதப்படை முகாம்களில் இருந்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துப்பாக்கி தோட்டாக்கள், 25 அதிநவீன துப்பாக்கிகள் மாயமானது மத்திய கணக்கு தணிக்கை துறை நடத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. மாயமான தோட்டாக்கள் மற்றும் துப்பாக்கிகள் தீவிரவாதிகளுக்கு சப்ளை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற தகவல் வெளியானது. இதுதொடர்பாக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பினர். இந்த சம்பவம் குறித்து விசாரிக்க குற்றப்பிரிவு போலீசுக்கு அரசு உத்தரவிட்டது. குற்றப்பிரிவு ஏடிஜிபி டோமின்தச்சங்கரி தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின் ஒரு பகுதியாக திருவனந்தபுரம் பேரூர்கடை ஆயுதப்படை முகாமில் ஆய்வு நடத்தப்பட்டது.