திருமலை: விசாகப்பட்டினத்தை நிர்வாக தலைநகராக்க சம்மதிக்கக்கோரி சந்திரபாபுவை முற்றுகையிட்டு கருப்புக்கொடி ஏந்தி ஒய்எஸ்ஆர் காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு மாநிலம் முழுவதும் பிரஜா சைத்தன்ய யாத்திரை (மக்கள் விழிப்புணர்வு யாத்திரை) மேற்கொண்டு வருகிறார். அதன்படி விஜயநகரம் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக நேற்று விசாகப்பட்டினம் விமான நிலையத்திற்கு காலை 11.40 மணிக்கு வந்தார். விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்ட சந்திரபாபுவை ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் திரண்டு வந்து வெளியே செல்லவிடாமல் விமான நிலையத்தை முற்றுகையிட்டு கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அறிந்த தெலுங்கு தேசம் கட்சியினரும் அங்கு திரண்டதால் இருதரப்பினர் இடையே வாக்குவாதம் முற்றி மோதல் ஏற்படும் சூழல் உருவானது. அப்போது சந்திரபாபு மற்றும் அவரது ஆதரவாளர்கள் கார் மீது செருப்பு, தக்காளி, கற்கள், தண்ணீர் பாக்கெட் போன்றவற்றை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் வீசினர்.