இளம்பிள்ளை: சேலம் இளம்பிள்ளை அருகே கேரள இளம்பெண் கொலை செய்யப்பட்டார். பிரேத பரிசோதனையில் அவர் கூட்டு பலாத்காரம் செய்து கல்லால் அடித்து கொலை செய்யபட்டது தெரிய வந்தது. இது தொடர்பாக 3 பேரை போலீசார் பிடித்த விசாரித்து வருகின்றனர்.சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே தப்பக்குட்டை கிராமம் பூசாரி காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் ஞானசுந்தரம் (44). ஆட்டோ டிரைவர். இவர் கேரளாவை சேர்ந்த பீனா (31) என்பவரை கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 11, 9 வயதுகளில் இரு பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். ஞானசுந்தரம், கடந்த 5 வருடங்களுக்கு முன்பு விபத்தில் உயிரிழந்தார். இதனையடுத்து குழந்தைகளுடன் மாமியார் வீட்டில் பீனா வசித்து வந்தார். இவர் சீரகாபாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் துப்புரவு பணியாளராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் பீனா அவரது வீட்டிற்கு அருகே உள்ள ஏரி பகுதி விவசாய நிலத்தில் கல்லால் தாக்கி கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். சடலத்தை மீட்ட மகுடஞ்சாவடி போலீசார், பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.