சென்னை: கே.பி.பி.சாமி திமுகவின் சுறுசுறுப்பு மிக்க தொண்டர் என அவர் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் நேற்று வெளியிட்ட இரங்கல் செய்தி: தமிழக முன்னாள் மீன்வளத்துறை அமைச்சரும், திருவொற்றியூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.பி.சாமி திடீரென்று மறைவெய்தினார் என்ற இதயத்தை கலங்க வைக்கும் துயரச் செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சிக்குள்ளானேன். அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். திமுகவின் சுறுசுறுப்பு மிக்க தொண்டராகவும், கழக வளர்ச்சிப் பணிகளில் கள வீரராகவும் செயல்பட்ட கே.பி.பி.சாமி இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர், தலைமை செயற்குழு உறுப்பினர், மாநில மீனவர் அணி செயலாளர் ஆகிய பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி கலைஞரின் அன்பையும், பாராட்டுதலையும் பெற்றவர்.மீன்வளத்துறை அமைச்சராக பணியாற்றிய அவர், மீனவர்களின் நலனே தன் தலையாய பணி என்ற உயரிய நோக்கில் அவர்களின் பிரச்னைகளுக்காக முதலமைச்சராக இருந்த கலைஞரிடமும், துணை முதலமைச்சராக இருந்த என்னிடமும் வாதாடி பல நலத்திட்டங்களை நிறைவேற்றுவதற்கு உற்ற துணையாகவும் ‘மீனவர் சமுதாயத்தின்’ விடி விளக்காகவும் இருந்தவர். திராவிட இயக்க கொள்கைகளை தன் நெஞ்சின் மீது ஏந்தி எப்போதும் பொதுப்பணியில் ஈடுபட்டு வந்த அவர் சட்டமன்றத்தில் ஆற்றிய பணிகளும், என்னுடன் இணைந்து பணியாற்றிய காலங்களும் என்றைக்கும் மறக்க இயலாதது.