சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருந்த போது அவரை பார்க்கக்கூட முடியாத ஜெ.தீபா குயின் தொடருக்கு தடை கோரி வழக்கு தொடர எந்தவித உரிமையும் இல்லை என திரைப்பட இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றினை அடிப்படையில் கொண்டு தலைவி என்ற தமிழ்படத்தை இயக்குநர் விஜய்யும், ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் குயின் என்ற இணையதள தொடரை இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனும் இயக்கி வருகின்றனர். இந்நிலையில் தனது அனுமதி இல்லாமல், தலைவி, குயின், ஜெயா உள்ளிட்ட படங்களை இணையதளத்தில் வெளியிட தடை விதிக்க கோரி ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபா சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி தீபாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதனை அடுத்து தீபா தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவில் ஜெயலலிதாவின் கண்ணியத்திற்கும், தனது வாழ்க்கைக்கும் பாதிப்பு இல்லாமல் இந்த திரைக்கதை எழுதப்பட்டுள்ளதா? என்பதை சரிபார்க்க வேண்டிய அவசியம் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு, மனு தொடர்பாக இயக்குனர்கள் விஜய் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.