×

குயின் தொடருக்கு தடை கோரி வழக்கு தொடர தீபாவுக்கு எந்த உரிமையும் இல்லை: கௌதம் வாசுதேவ் மேனன் ஐகோர்டில் பதில் மனு

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருந்த போது அவரை பார்க்கக்கூட முடியாத ஜெ.தீபா குயின் தொடருக்கு தடை கோரி வழக்கு தொடர எந்தவித உரிமையும் இல்லை என திரைப்பட இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றினை அடிப்படையில் கொண்டு தலைவி என்ற தமிழ்படத்தை இயக்குநர் விஜய்யும், ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் குயின் என்ற இணையதள தொடரை இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனும் இயக்கி வருகின்றனர். இந்நிலையில் தனது அனுமதி இல்லாமல், தலைவி, குயின், ஜெயா உள்ளிட்ட படங்களை இணையதளத்தில் வெளியிட தடை விதிக்க கோரி ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபா சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி தீபாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதனை அடுத்து தீபா தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவில் ஜெயலலிதாவின் கண்ணியத்திற்கும், தனது வாழ்க்கைக்கும் பாதிப்பு இல்லாமல் இந்த திரைக்கதை எழுதப்பட்டுள்ளதா? என்பதை சரிபார்க்க வேண்டிய அவசியம் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு, மனு தொடர்பாக இயக்குனர்கள் விஜய் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வரும் போது இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றினை மையமாக வைத்து எடுக்கப்படுகின்ற படங்களுக்கு எதிராக வழக்கு தொடர்வதற்கு தீபாவிற்கு எந்தவிதமான உரிமையும் இல்லை எனவும், மேலும் ஜெயலலிதாவின் நெருங்கிய உறவினர் என்று கூறும் தீபா, ஜெயலலிதா உயிருடன் இருந்த போது அவரை பார்க்க கூட முடியவில்லை எனவும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இவர் இணையதள தொடருக்கு தடை கூறுவது சரியானதாக இல்லை எனவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார். மேலும் இந்த கதை உண்மை சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது என்றும், அனிதா சிவகுமார் என்பவர் எழுதிய புத்தகத்தின் அடிப்படையில் இந்த குயின் தொடர் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். எந்த உரிமையும் இல்லாமல், உள்நோக்கத்துடன் தீபா தாக்கல் செய்த இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கேட்டு கொண்டார். இந்த வழக்கில் இயக்குநர் விஜய் உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்டதை அடுத்து, விசாரணையை மார்ச் 6ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Tags : Deepa ,Gautam Vasudev Menon Deepa ,Queen , Queen Series, Prohibition, Case, Deepa, Not Right, Gautam Vasudev Menon, In Court, Petition
× RELATED ஜெயலலிதா நகைக்கு உரிமை கோரிய தீபாவுக்கு எதிர்ப்பு