டெல்லி : வனவிலங்கு பாதுகாப்பு, மனிதர்கள் கடத்தல் தடுப்பு உள்ளிட்ட 10 துறைகளில் இந்தியா - மியான்மர் இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மியான்மர் அதிபர் வின் மைன்ட், பிப்ரவரி 29ம் தேதி வரை இந்தியாவில் சுற்று பயணம் மேற்கொள்ளவுள்ளார். ஜனாதிபதி ராம் நாத் கோவிந்தின் அழைப்பை ஏற்று வின் மைன்ட்இந்தியாவிற்கு வருகை புரிந்துள்ளார். இந்நிலையில் இந்தியா வந்துள்ள மியான்மர் அதிபர் வின் மைன்ட், புதுடெல்லியில் இன்று பிரதமர் மோடியை சந்தித்தார். இரு தரப்பு உறவுகள் குறித்து இவர்கள் விரிவாக விவாதித்தனர். இதைத் தொடர்ந்து 2 நாடுகளுக்கும் இடையே சுகாதாரம், தகவல் தொடர்பு, பெட்ரோலியம், எரிசக்தி, வனவிலங்கு பாதுகாப்பு, மனிதர்கள் கடத்தல் தடுப்பு ,உள்கட்டமைப்பு உள்ளிட்ட 10 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.