டெல்லி கலவரம் - பலி எண்ணிக்கை 34 ஆக உயர்வு
*குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகவும், ஆதரவாகவும் போராட்டம் நடத்தி வருபவர்களுக்கு இடையே, டெல்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை மோதல் வெடித்தது.
*இந்த மோதல் கலவரமாக உருவெடுத்ததை அடுத்து தொடர்ந்து நடைபெற்ற வன்முறை சம்பவங்களில் வீடுகள், கடைகள், வாகனங்கள் கல்வீசி தாக்கப்பட்டன.
*சில வாகனங்கள், கடைகளுக்கும் தீ வைக்கப்பட்டது. இதையடுத்து டெல்லி போலீசார் மட்டுமின்றி, துணை ராணுவப்படையினர், அதிரடிப் படையினர் கலவரம் பாதித்த பகுதிகளில் குவிக்கப்பட்டனர்.
*தற்போதுவரை லோக் நாயக் ஜெய்பிரகாஷ் நாராயண் மருத்துவமனையில் இருவரும், ஜேபிசி மருத்துவனையில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். குருதேஜ் பகதூர் மருத்துவமனையில் 30 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அவர்களுள் ஒரு பெண் உட்பட 9 பேர் துப்பாக்கியால் சுடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
*மேலும் 200க்கும் மேற்பட்டோர், படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வரும் நிலையில், காயமடைந்த பெரும்பாலானோர் கலவரக்காரர்களிடமிருந்து தப்பிக்கும் பொழுது கீழே விழுந்து காயமடைந்திருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
*144 தடை உத்தரவு அமலில் உள்ள வடகிழக்கு டெல்லியில் தற்போது 45 கம்பெனி துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
*இதனால் மவுஜ்பூர், ஜாப்ராபாத், சீலம்பூர், பார்பர்பூர் உள்ளிட்ட பகுதிகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. கலவரம் தொடர்பாக 106 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 18 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.