உலகளவில் 10 பணக்கார நாடுகளின் பட்டியலில் இந்தியா ஆறாவது இடத்தில் உள்ளது. உலக அரங்கில் முக்கியமான முதலீட்டு வங்கி மற்றும் நிதி சேவை நிறுவனமான கிரெடிட் சூயிஸ், உலக நாடுகளின் சொத்து அறிக்கையின் 10வது பதிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. ஒவ்வோர் ஆண்டும் இதுபோன்ற அறிக்கை வெளியிடுவது அந்நிறுவனத்தின் வழக்கம் ஆகும். மில்லியனர்கள் மற்றும் பில்லியனர்களின் எண்ணிக்கை, அவர்கள் வைத்திருக்கும் சொத்துகளின் விகிதம் மற்றும் உலகளவில் சமத்துவமின்மையின் நிலை ஆகியவற்றின் அடிப்படையில், ஒரு நாட்டின் செல்வத்தின் வளர்ச்சி மற்றும் விநியோகம் இரண்டையும் இந்த அறிக்கை கணிக்கிறது. இந்த நிறுவனம் சொத்து என்பதை ஒரு நபரின் நிகர சொத்து மதிப்பு அடிப்படையில் வரையறுக்கிறது. பணம், நிதிச் சொத்துகளின் மதிப்பு மற்றும் வீடுகளின் உண்மையான சொத்துகளின் மதிப்பைச் சேர்ப்பதன் மூலமும், பின்னர் ஒரு தனிநபரின் கடன்களைக் கழித்தும் கணக்கிடுகிறது.