அமெரிக்காவில் பீர் தொழிற்சாலையில் 5 சக ஊழியர்களை துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிட்டு தானும் தற்கொலை

வாஷிங்டன்: அமெரிக்காவில் பீர் தொழிற்சாலையில் 5 சக ஊழியர்களை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து விட்டு தானும் தற்கொலைச் செய்து கொண்டார். அமெரிக்காவின் விஸ்கான்சின்  நகரின் மில்வாக்கியில்  மோல்சன் கூர்ஸ் வளாகம் உள்ளது. இந்த வளாகத்தில் கார்ப்பரேட் அலுவலகங்கள் மற்றும் பீர் தயாரிக்கும் தொழிற்சாலை என 20க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் உள்ளன. அங்கு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு வந்தனர். அதில் பீர் தயாரிக்கும் தொழிற்சாலையில் மர்மநபர் ஒருவர்  தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு அங்கிருந்த தொழிலாளர்களை குறிவைத்து கண்மூடித்தனமாக சுட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் அலறியடித்துக்கொண்டு அங்கும் இங்கும் ஓடினர்.

மர்மநபர் நடத்திய  துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பலர் படுகாயமடைந்துள்ளனர். துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட  51 வயது நபர்  தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இவர் அதே  பீர் தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலைபார்த்து வந்த  ஊழியர் என தகவல் வெளியாகி உள்ளது. துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பலியானவர்கள் குடும்பத்திற்கு  ஜனாதிபதி  டொனால்டு  டிரம்ப் இரங்கல் தெரிவித்து உள்ளார்.

Related Stories: