×

அமெரிக்காவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியா: கடந்த 3 ஆண்டுகளில் 10 மடங்கு அதிகரிப்பு..!

வாஷிங்டன்: அமெரிக்காவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அமெரிக்காவிடம் வாங்கும் கச்சா எண்ணெய் அளவு, கடந்த 3 ஆண்டுகளில் சுமார் 10 மடங்கு அதிகரித்திருக்கிறது. அமெரிக்க அதிபரின் இந்திய பயணத்தின் போது இரு நாடுகளிடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தான நிலையில், அதில் எரிசக்தி தொடர்பான விஷயங்கள் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்தியா தனது தேவைக்கான கச்சா எண்ணெய்யை பெருமாளும் ஈரான், ஈராக், சவூதி போன்ற நாடுகளிடம் இருந்து தான் இறக்குமதி செய்து வருகிறது. இந்நிலையில் ஈரான் மீதான பொருளாதார தடை காரணமாக அந்நாட்டிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா குறைத்து கொண்டது. அதற்கு பதிலாக அமெரிக்காவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உதாரணமாக 2017 - 2018ம் ஆண்டில் முதன் முறையாக அமெரிக்காவிடம் இருந்து தினமும் 38 ஆயிரம் பேரல் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்த இந்தியா, 2018 - 2019ம் ஆண்டில் தினமும் 1.24 லட்சம் பேரல் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்தது.

இந்நிலையில் 2019 - 2020ம் ஆண்டின் முதல் 6 மாதத்தில் மட்டும் சுமார் 1 லட்சம் பேரல் கச்சா எண்ணெய்யை கடந்து இறக்குமதி செய்துள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் தினமும் சுமார் 2.5 லட்சம் பேரல் என்ற அளவை தாண்டும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எரிசக்தி துறையில் இந்தியா - அமெரிக்காவின் உறவு குறித்து பேசிய அமெரிக்க எரிசக்தி துறை பிரதிநிதி தாம் புரோலிக், அமெரிக்காவிடம் இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவது கடந்து 3 ஆண்டுகளில் 10 மடங்கு அதிகரித்திருப்பதாக கூறியுள்ளார். பொதுவாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு டாலர் அதிகரித்தால், இந்தியாவிற்கு 7 ஆயிரத்து 200 கோடி ரூபாய் செலவு அதிகரிக்கும். இந்நிலையில் அமெரிக்காவிடம் இருந்து பெறப்படும் கச்சா எண்ணெய்யின் விலை ஒபெக் நாடுகளில் இருந்து பெறப்படும் கச்சா எண்ணெய் விலையை காட்டிலும் பேரலுக்கு சுமார் 3 டாலர்கள் குறைவு. அமெரிக்காவிடம் இருந்து இறக்குமதி செய்யப்படும் வெஸ்ட் டெக்டாஸ் இன்டெர்மிடியட் கச்சா எண்ணெய்யை சுத்திகரிக்க எளிது என்றும், அதில் சல்பரின் அளவு குறைவு என்றும் தெரிகிறது.

கரோனா பாதிப்பு காரணமாக சீனா தனது கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைத்து கொண்டுள்ள நிலையில், அதற்கு தகுந்தாற்போல் ஒபெக் நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்து கொள்ள மறுத்துள்ளன. இதன் காரணமாக கச்சா எண்ணெய் விலை மேலும் சரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலையில் ஒபெக் நாடுகளில் இருந்து இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய் விலை 56 டாலராக இருக்கிறது. ஆனால் அமெரிக்காவிடம் இருந்து இறக்குமதி செய்யும் வெஸ்ட் டெக்டாஸ் இன்டெர்மிடியட் கச்சா எண்ணெய் 52 டாலராக உள்ளது. நம் தேவைக்கான கச்சா எண்ணெய்யில் சுமார் 83 சதவிகிதத்தை நாம் இறக்குமதி செய்கிறோம். இந்நிலையில் ஒபெக் நாடுகளிடம் இருந்து மட்டுமல்லாமல் அமெரிக்காவிடம் இருந்தும் கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா அதிகரிப்பது, கச்சா எண்ணெய்யால் இந்தியாவிற்கு ஏற்படும் செலவுகளை சற்று குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கரோனாவின் தாக்கம் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய்யின் விலையில் எதிரொலித்துள்ளது. ஆனால் கச்சா எண்ணெய் குறைந்த அளவிற்கு பெட்ரோல், டீசலின் விலை இந்தியாவில் குறையவில்லை. உதாரணமாக 2019ம் ஆண்டு மே மாதம் ஒரு பேரல் கச்சா எண்ணெய் 71 டாலர் என்று இருந்த போது சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 74 ரூபாய் 90 காசுகளாகவும், டீசல் விலை 71 ரூபாய் 7 காசுகளாகவும் இருந்தது. தற்போது ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 56 டாலர். அதாவது பேரலுக்கு சுமார் 15 டாலர் குறைந்துள்ள நிலையில், ஒரு லிட்டர் பெட்ரோல் அதே ரூபாய் அளவான 74 ரூபாய் 81 காசுகள் என்ற நிலையிலேயே இருக்கிறது. டீசல் விலை 68 ரூபாய் 32 காசுகளாக உள்ளது.

Tags : India ,US , US, crude oil, imports, India, 10-fold increase
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!