இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணுக்கு வீட்டுவசதி வாரியம் சார்பாக அரசு வீடு ஒதுக்கி அரசாணை வெளியீடு!

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணுக்கு வீட்டுவசதி வாரியம் சார்பாக அரசு வீடு ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. எளிமையான தலைவர், நேர்மையான அரசில்வாதி எனப் பலராலும் புகழப்படுபவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு. இவர், கடந்த 12 ஆண்டுகளாக சென்னை தியாகராயநகரில் உள்ள அரசு குடியிருப்பில் வசித்துவந்தார். அந்தக் குடியிருப்பு வீடு, அரசு அவருக்கு இலவசமாக வழங்கியது. இது என் கொள்கைக்கு எதிரானது என்று கூறி இலவசமாகக் கொடுத்த வீட்டுக்கு, வாடகை கட்டிவந்தார் நல்லகண்ணு. இப்படியிருந்த நிலையில், 1953ம் ஆண்டு கட்டப்பட்ட அந்த வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மிகவும் பழுதாகி இருந்ததால் அதில் குடியிருந்தவர்கள் காலி செய்யும்படி கேட்டு தமிழக அரசு கேட்டுக்கொண்டது. இது தொடர்பாக, மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்ட நல்லகண்ணு, அங்கிருந்த மற்ற குடியிருப்பு வாசிகளைப் போல தானும் வெளியேறினார். இதையடுத்து, அவர் கே.கே.நகரில் உள்ள வீடு ஒன்றிற்குக் குடிபெயர்ந்தார். அப்போது, பொது ஒதுக்கீட்டில் குடியிருப்போருக்கு அரசு வேறு வீடுகள் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அப்போது தொலைபேசிவாயிலாக பேசி நல்லகண்ணுவை தொடர்பு கொண்டு, உங்களுக்கு அரசு வீடு தர தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்தார். இந்த நிலையில் சென்னை நந்தனம் பகுதியில் வீட்டுவசதி வாரியம் சார்பாக நல்லகண்ணுவுக்கு வீடு ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதனையடுத்து, இந்திய கம்யூனிஸ்ட் மூத்த  தலைவர் நல்லகண்ணு அவர்கள் விரைவில் அரசு ஒதுக்கியுள்ள வீட்டிற்கு குடியேறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: