சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணுக்கு வீட்டுவசதி வாரியம் சார்பாக அரசு வீடு ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. எளிமையான தலைவர், நேர்மையான அரசில்வாதி எனப் பலராலும் புகழப்படுபவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு. இவர், கடந்த 12 ஆண்டுகளாக சென்னை தியாகராயநகரில் உள்ள அரசு குடியிருப்பில் வசித்துவந்தார். அந்தக் குடியிருப்பு வீடு, அரசு அவருக்கு இலவசமாக வழங்கியது. இது என் கொள்கைக்கு எதிரானது என்று கூறி இலவசமாகக் கொடுத்த வீட்டுக்கு, வாடகை கட்டிவந்தார் நல்லகண்ணு. இப்படியிருந்த நிலையில், 1953ம் ஆண்டு கட்டப்பட்ட அந்த வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மிகவும் பழுதாகி இருந்ததால் அதில் குடியிருந்தவர்கள் காலி செய்யும்படி கேட்டு தமிழக அரசு கேட்டுக்கொண்டது. இது தொடர்பாக, மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.