பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் செயல்படுத்த வேண்டிய பல்வேறு நீர்ப்பாசன திட்டங்கள் தொடர்பாக ஆலோசிக்க டெல்லி சென்றுள்ள கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ரமேஷ் ஜாரகிஹோளி, மத்திய நீர்பாசனத் துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்தை நேற்று காலை நேரில் சந்தித்து பேசினார். அப்போது அமைச்சரிடம் அவர் கூறியதாவது: பெங்களூரு நகரம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கும் நோக்கத்தில் காவிரி நதியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் திட்டம் செயல்படுத்த மாநில அரசு முடிவு செய்தது. இது தொடர்பாக திட்ட வரைவு தயாரித்து மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளோம். காவிரியின் குறுக்கே அணை கட்டுவதின் மூலம் கர்நாடகம் மட்டுமில்லாமல் தமிழகத்திற்கும் நன்மை கிடைக்கும்.