புதுடெல்லி: சீனாவில் தீவிரம் அடைந்துள்ள கொரோனா வைரஸ் பிற நாடுகளுக்கும் பரவி வருகிறது. இதனால், இந்தியா உட்பட பல்வேறு நாடுகளின் பொருளாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்றுமதி, இறக்குமதி, உற்பத்தி ஸ்தம்பித்துள்ளது. ஏற்றுமதி பாதிக்கப்பட்ட துறைகளில் ஆபரண உற்பத்தி துறையும் ஒன்று. நவரத்தினங்கள் மற்றும் ஆபரண ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் புள்ளிவிவரப்படி, நடப்பு நிதியாண்டில் கடந்த ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான 10 மாதங்களில் ஆபரண ஏற்றுமதி 9.17 சதவீதம் சரிந்துள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில் 296.64 கோடி டாலர் மதிப்பிலான நவரத்தினம் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதியாகியுள்ளன. கடந்த ஆண்டு இதே மாதம் இந்த ஏற்றுமதி மதிப்பு 326.58 கோடி டாலராக இருந்தது.