திருவனந்தபுரம்: டெல்லியில் பயங்கர கலவரம் ஏற்பட்டுள்ளதை அடுத்து, கேரளாவில் சமூக வலைத்தளங்களில் மத வாதத்தை தூண்டும் வகையில் அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்ைக எடுக்கப்படும் என கேரள டிஜிபி எச்சரித்துள்ளார். குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து டெல்லியில் போராட்டம் நடந்து வருகிறது. இந்த நிலையில் டெல்லியில் திடீரென வன்முறை வெடித்தது. இதில் ஒரு போலீஸ்காரர் உட்பட 23 பேர் உயிரிழந்தனர். 48 போலீசார், பத்திரிகையாளர் உட்பட 180 பேர் காயம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் கலவரம் இந்தியாவின் மற்ற பகுதிகளில் பரவாமல் தடுக்க அனைத்து மாநில டிஜிபிக்களுக்கும் மத்திய உள்துறை உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் கேரள டிஜிபி லோக்நாத் பெக்ரா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: கேரளாவில் மத மோதல்களை தூண்டும் வகையில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ யாராவது முயற்சித்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வாட்ஸ்-அப், பேஸ்-புக் உட்பட சமூக வலைத்தளங்களில் மத மோதல்களை தூண்டும் வகையில் தகவல்களை உருவாக்கவோ, பகிரவோ செய்பவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சமூக வலைத்தளங்கள் முழுவதையும் போலீஸ் கண்காணித்து வருகிறது. கேரளாவில் எந்த அசம்பாவித சம்பவங்களும் ஏற்பாடாத வகையில் உரிய நடவடிக்கை எடுக்க அனைத்து மாவட்ட எஸ்பிக்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.