சீட்டு பணத்தை திருப்பி கேட்ட 2 பேருக்கு வெட்டு: வாலிபர் கைது

அண்ணாநகர்: அரும்பாக்கம், ராணி அண்ணாநகரை சேர்ந்தவர் மணிகண்டன் (38). இவர், அப்பகுதி மக்களிடம் 1 லட்சம் மதிப்பிலான மாதச்சீட்டு நடத்தி வந்தார். இவரிடம் கோயம்பேடு பேருந்து நிலையத்தை சேர்ந்த ராஜா (46) என்ற ஆட்டோ டிரைவர் பணம் கட்டி வந்துள்ளார். கடந்த சில மாதங்களாக மணிகண்டன் 1 லட்சத்துக்கான ஏலத்தை விடாமலும், அதற்குரிய பணத்தை திருப்பி தராமலும் அப்பகுதி மக்களை ஏமாற்றி வந்துள்ளார். இதில் பாதிக்கப்பட்ட ஆட்டோ டிரைவர் ராஜா நேற்று முன்தினம் மாலை மணிகண்டன் வீட்டுக்கு சென்று ஏலப் பணத்தை திருப்பித் தரும்படி கேட்டிருக்கிறார். இதனால் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் வந்து அடிதடி ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் வீட்டில் இருந்த கத்தியால் ராஜாவின் தலையில் சரமாரியாக வெட்டினார். தகவலறிந்து ராஜாவின் நண்பர் குமார் ஓடிவந்து தட்டிக்கேட்டுள்ளார்.

அவரையும் மணிகண்டன் கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். புகாரின்பேரில் அரும்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த ராஜா, குமார் ஆகிய இருவரையும் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து அரும்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து, மணிகண்டனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: