சென்னையை சேர்ந்த அண்ணன், தம்பி குளத்தில் மூழ்கி பலி

சென்னை: தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகே சேர்வைகாரன்மடம் பஞ்சாயத்து சக்கம்மாள்புரத்தை சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மனைவி சந்திரா. இவர்களது மகன்கள் இசக்கிமுத்து (9), மாரிச்செல்வம் (7). பிரபாகரன், குடும்பத்துடன் சென்னை துரைப்பாக்கத்தில் வசித்து வருகிறார். அதே பகுதியில் மளிகை கடை வைத்துள்ளார். அங்குள்ள பள்ளியில் இசக்கிமுத்து 4ம் வகுப்பும், மாரிச்செல்வம் 3ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.  இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையில் நேற்று நடந்த உறவினர் வீட்டு திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக பிரபாகரன் குடும்பத்துடன் சொந்த ஊரான சக்கம்மாள்புரத்திற்கு வந்துள்ளார். அவரது மகன்கள் இருவரும், நேற்று மாலை ஊர் அருகில் உள்ள குளத்தில் மீன்பிடிக்க சென்றனர்.

ஆனால் வெகுநேரமாகியும் வீட்டுக்கு திரும்பி வராததால் உறவினர்கள் தேடி சென்று உள்ளனர். அங்கு குளத்து கரையில் அவர்களது உடை மற்றும் செருப்பு கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். சந்தேகத்தில் குளத்தில் இறங்கி தேடி பார்த்தனர். அப்போது இசக்கிமுத்து, மாரிச்செல்வம் ஆகியோர் தண்ணீரில் மூழ்கி இறந்து கிடந்தது தெரிய வந்தது. சிறுவர்கள் உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். தகவலறிந்த சாயர்புரம் போலீசார் விரைந்து சென்று இருவரது உடல்களை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் விசாரணையும் நடத்தி வருகின்றனர்.

Related Stories: