புழல்: புழல் 22வது வார்டு காவாங்கரை, ஜி.என்.டி சாலையின் சர்வீஸ் சாலையில் நீண்ட காலமாக கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதி மக்களுக்கு தொற்றுநோய் ஏற்படும் அபாயம் நிலவி வருகிறது. சென்னை மாநகராட்சி, மாதவரம் மண்டலம், புழல் 22வது வார்டான காவாங்கரை, ஜி.என்.டி சாலையின் சர்வீஸ் சாலையை ஆக்கிரமித்து ஏராளமான டீக்கடைகள், ஓட்டல்கள் மற்றும் மளிகைக் கடைகள் இயங்கி வருகின்றன. இங்கிருந்து நீண்ட காலமாக சர்வீஸ் சாலையில் கழிவுகளுடன் கூடிய நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த கழிவுநீர் அங்குள்ள குடியிருப்பு பகுதிகளிலும் குட்டைபோல் தேங்கியுள்ளது.இதனால் அங்கு அதிகளவு கொசுக்கள் உற்பத்தியாகி, அங்குள்ள நகர் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மர்ம காய்ச்சலை ஏற்படுத்தி வருகிறது. மேலும், இங்கு வசிக்கும் மக்களுக்கு பல்வேறு நோய்தொற்றுகள் ஏற்படும் அபாய நிலையும் நீடிக்கிறது.