சேலம் திமுக எம்.பி வெற்றி எதிர்த்த வழக்கு தள்ளுபடி: ஐகோர்ட் தீர்ப்பு

சென்னை: சேலம் மக்களவை தொகுதி திமுக எம்.பி பார்த்திபன் வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்த தேர்தல் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் சேலம் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் 1 லட்சத்து 47 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.  இந்த தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட பிரவீணா என்பவர், பார்த்திபன் வெற்றியை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்தார். அவரது மனுவில், வேட்புமனுவுடன் தாக்கல் செய்த படிவம் 26ல் வேட்பாளர்கள், குற்ற விவரங்கள், சொத்து உள்ளிட்ட விவரங்களை தெரிவிக்க வேண்டும்.

 இந்த விவரங்களை முறையாக சமர்ப்பிக்காத பார்த்திபனின் வேட்பு மனுவை தேர்தல் அதிகாரி ஏற்றுக்கொண்டது சட்டவிரோதமானது.  எனவே, பார்த்திபன் வெற்றியை செல்லாது என்று அறிவிக்க வேண்டும்  என்று கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி  பி.டி.ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பார்த்திபன் தரப்பில் ஆஜரான வக்கீல் ரிச்சர்ட் வில்சன்,  மனுதாரர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தொடர்ந்து விசாரணையை தள்ளிவைக்க கோருகிறார். மனுதாரரின் இந்த நடவடிக்கை மக்கள் பிரதிநிதித்துவ சட்ட விதிகளுக்கு முரணானது.  எனவே, இந்த தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதிட்டார்.இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி பி.டி.ஆஷா, தி.மு.க  எம்பி பார்த்திபனுக்கு எதிரான தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்து  உத்தரவிட்டார்.

Related Stories: