ஊட்டி: விதிமுறைகள் மீறி கட்டப்பட்டதாக கூறி, ஊட்டியில் 37 கட்டிடங்களுக்கு சீல் வைத்தனர். நீலகிரி மாவட்டத்தில் மாஸ்டர் பிளான் சட்டம் அமலில் உள்ள நிலையில், முறையாக அரசிடம் அனுமதி பெற்ற பிறகே விதிமுறைகளின் படி கட்டிடங்களை கட்ட முடியும். இந்த சட்டத்தின் படி வனத்துறை, புவியியல் துறை, வருவாய்த்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புக்களிடம் இருந்து முறையான அனுமதி பெற வேண்டும். அதுமட்டுமின்றி, மாவட்ட நிர்வாகம் அமைத்துள்ள கமிட்டியிடம் அனுமதி பெற்ற பின்னரே கட்டிடங்களை கட்ட முடியும். ஆனால், நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் அனுமதி பெறாமல் கட்டிடங்கள் கட்டப்படுகிறது. இந்த நிலையில், விதிமுறைகள் மீறி கட்டப்படும் கட்டிடங்களுக்கு சீல் வைக்க நகராட்சி ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.