டெல்லி : டெல்லியில் கலவரத்தை அடக்க ராணுவத்தை அனுப்ப வேண்டும் என்ற முதல்வர் கெஜ்ரிவாலின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்தது. டெல்லியில் கலவரத்தை ஒடுக்கும் நடவடிக்கையில் ராணுவம் ஈடுப்படுத்த மாட்டாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
டெல்லி வன்முறை 23 பேர் உயிரிழப்பு
டெல்லியில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் இடையே கடந்த சில நாட்களாக தொடர்ந்து மோதல்கள் நடைபெற்று வருகின்றன. இதுவரை சுமார் 23 பேர், இந்த மோதல்களில் கொல்லப்பட்டுள்ளனர். காவல்துறை கைகட்டி வேடிக்கை பார்ப்பதாக எதிர்கட்சிகள் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன. பல்வேறு வீடியோக்கள் மற்றும் போட்டோக்கள் இதை நிரூபிக்கும் வகையில் வெளியாகிக் கொண்டிருக்கின்றன
ராணுவம் வரவழைக்க கெஜ்ரிவால் கோரிக்கை
இந்நிலையில், பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டும் நிலைமை கட்டுக்குள் வரவில்லை என முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும் எனவும், ராணுவம் வரவழைக்கப்பட வேண்டும் என்றும் கெஜ்ரிவால் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
கூடுதல் துணை ராணுவம் மட்டுமே
டெல்லியில் கலவரத்தை அடக்க ராணுவத்தை அனுப்ப வேண்டும் என்ற முதல்வர் கெஜ்ரிவாலின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்தது. டெல்லியில் கலவரத்தை ஒடுக்கும் நடவடிக்கையில் ராணுவம் ஈடுப்படுத்த மாட்டாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. டெல்லியில் கலவரத்தை ஒடுக்க போதுமான அளவு துணை ராணுவப்படையினர் அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இதையடுத்து டெல்லியில் கலவரம் பாதித்த இடங்களில் அமைதி நிலைநாட்ட கூடுதல் துணை ராணுவப் படையினர் அனுப்பப்பட்டனர். சிஆர்பிஎப், பிஎஸ்எப், இந்திய - திபெத் எல்லை போலீஸ் ஆகியவற்றை சேர்ந்த 800 பேர் கலவர பகுதிக்கு விரைந்தனர்.