டெல்லி : தஞ்சையில் இந்திய உணவு தொழில்நுட்பக் கழகத்தை தரம் உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. உணவு தொழில்நுட்பக்கழகத்தை தரம் உயர்த்த சட்டத்திருத்தம் மேற்கொள்ளவும் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. ஹரியானாவில் உள்ள உணவு தொழில்நுட்பக் கழகத்தையும் தரம் உயர்த்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரண்டு நாள் இந்தியா பயணத்திற்கு பின் அமைச்சரவை கூட்டம் நடந்து வருகிறது. ரூ.1,480 கோடியில் தேசிய ஜவுளி தொழில்நுட்ப மையம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
புலிகள் மற்றும் பிற வனவிலங்குகள் பாதுகாப்பு, பெட்ரோலிய பொருட்கள் மற்றும் தகவல் தொடர்புத் துறைகளில் இந்தியாவுக்கும் மியான்மருக்கும் இடையிலான ஒத்துழைப்புக்கான மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கும் அரசாங்கம் ஒப்புதல் அளித்தது. அமைச்சரவைக் கூட்டத்தைத் தொடர்ந்து புதுதில்லியில் ஊடகங்களுக்கு விளக்கமளித்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், வாடகைத்தாய் மசோதா தொடர்பான தேர்வுக் குழுவின் அனைத்து பரிந்துரைகளையும் அமைச்சரவை இன்று ஏற்றுக்கொண்டது என்றார்.
வாடகைத் தாய் நெருங்கிய உறவினர்களில் ஒருவராக மட்டும் இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, விருப்பமுள்ள எந்த ஒரு பெண்ணும் வாடகை தாயாக அனுமதிக்கப்பட வேண்டும் என்று மாநிலங்களவை தேர்வுக் குழு வாடகைத் மசோதாவில் சட்டத் திருத்தம் செய்ய பரிந்துரைத்தது. மேலும் வாடகைத் தாய் தேர்வைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பு கருத்தரிக்க இயலாமை காலமாக ஐந்து ஆண்டுகள் தேவை என்ற கட்டுப்பாடுகளை நீக்கவும் இந்த குழு பரிந்துரைத்தது. வாடகை தாய்க்கான காப்பீட்டுத் தொகை மசோதாவில் முன்மொழியப்பட்ட 16 மாதங்களிலிருந்து 36 மாதங்களாக உயர்த்தப்பட வேண்டும் என்பதையும் தேர்வுக்குழு பரிந்துரைத்தது. இந்த குழு பரிந்துரைத்த அனைத்திற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.