தேனி: தேனி மாவட்டம் குரங்கணியில் மீண்டும் ஆபத்தான வகையில் மலையேற்றம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இது குறித்த வீடியோ வெளியாகியிருக்கிறது. 3 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட காட்டுத்தீயில் சுற்றுலா பயணிகள் 23 பேர் உயிரிழந்த நிலையில், மீண்டும் ஒரு ஆபத்தான மலையேற்றம் செய்யப்பட்டிருக்கிறது. தேனி மாவட்டத்தை பொறுத்தவரையில் மலையேற்ற பயிற்சிக்கு என்று ஒரேவொரு வழித்தடம் தான் உள்ளது. அதாவது குரங்கணி முதல் டாப் ஸ்டேஷன் வரையிலான பகுதியாகும். இந்த பகுதியில் தற்போது காட்டுத்தீ அதிகளவில் பரவி வருவதன் காரணமாக கடந்த 15ம் தேதி மலையேற்ற பயிற்சிக்கு வனத்துறை தடை விதித்துள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை இந்த தடை நீடிக்கும் எனவும் வனத்துறை தெரிவித்தது. இதற்கிடையில் கடந்த 2018ம் ஆண்டு மார்ச் மாதம் 11ம் தேதி சுற்றுலா பயணிகள் கொலுக்குமலையில் இருந்து குரங்கணி நோக்கி அனுமதி இல்லாத பகுதியில் சென்று தீவிபத்தில் சிக்கி 23 பேரும் பலியாகினர்.