சென்னை: நெகிழி கழிவுகளால் ஏற்படும் பாதிப்புகள் ஒருபுறம் இருக்க, தற்போது இ - வேஸ்ட் உருவாவதும், உலகளவில் அதிகரித்து வருகிறது. மின்னணு கழிவு அதிகம் உள்ள மாநிலங்களில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. மின்னணு கழிவுகள் அதிகரிப்பதை தடுக்க சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்கால வாழ்க்கையில் சுமார்ட் போனில் தொடங்கி, பல்வேறு மின்னணு சாதனங்கள் அவசியமாகிவிட்டன. இன்றைய நவீன உலகில் ஒன்றுக்கும் மேற்பட்ட டிவிக்கள், குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ஒரு சுமார்ட் போன் என வீடு முழுக்க நவீன கேஜெட்டுகளின் ஆக்கிரமிப்புதான். இதன் விளைவு கடந்தாண்டில் மட்டும் உலகம் முழுவதும் உருவான மின்னணு கழிவுகளின் அளவு 5 கோடி டன். இவை அனைத்துமே கம்ப்யூட்டர்கள், சுமார்ட் போன்கள், டேப்லெட் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள், இவற்றில் 20 சதவீதம் பொருட்கள் மண்ணில் புதைக்கப்படுவதால் வரும் காலங்களில் நீர் நிலைகள் பாதிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக நீரியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். நெகிழி கழிவால் ஏற்படும் பாதிப்புகள் ஒருபுறம் இருக்க, 60 முதல் 100 சதவீதம் வரை, இயற்கைக்கும், சுற்றுச்சூழலுக்கும் தீங்கு தரக்கூடிய ஈயம், பாதரசம் போன்ற ரசாயனங்கள், எலக்ட்ரானிக் பொருட்களில் இருந்து தான் வெளியாகின்றன.