மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்காக தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் மீண்டும் மார்ச் 9ம் தேதி கூடுகிறது

சென்னை: தமிழக சட்டப்பேரவை மார்ச் 9ம் தேதி மீணடும் கூடவுள்ளதாக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அறிவித்துள்ளார். மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்காக சட்டப்பேரவை கூட உள்ளதாக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

பட்ஜெட் கூட்டத்தொடர் முதல் அமர்வு

தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 14ந்தேதி கூடியது. அன்றைய தினம் துணைமுதல்வரும், நிதி அமைச்சருமான ஓபிஎஸ் 2020-21ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தார். இதில் பல்வேறு துறைகளுக்கு எவ்வளவு நிதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளது என்று அறிவிக்கப்பட்டது.அதையடுத்து நடைபெற்ற அலுவல் ஆய்வு கூட்டத்தில் சட்டமன்றத்தை 20ந்தேதி வரை கூட்டுவது என முடிவு செய்யப்பட்டு, சபாநாயகர் அறிவித்தார்.

அதைத்தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்ட சட்டமன்ற கூட்டம் .17-ம் தேதி (திங்கட்கிழமை  காலை 10 மணிக்கு மீண்டும் கூடியது. அதைத்தொடர்ந்து பட்ஜெட் தொடர்பான விவாதம் மற்றும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதங்கள் நடைபெற்றன.கடைசி நாளான முதல்வர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வேளாண் மண்டல மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில் தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார். பிப்ரவரி 14ல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு பிப்ரவரி 20ம் தேதி வரை நடைபெற்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதலாவது அமர்வில் மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெறவில்லை.

தமிழக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அறிவிப்பு

இந்நிலையில்  மார்ச் 9ம் தேதி தமிழக சட்டப்பேரவை மீண்டும் கூடுகிறது என்றும் கூட்டத்தொடரில் துறை ரீதியிலான மானியக் கோரிக்கைகள் குறித்த விவாதம் நடைபெறும் என்றும் தமிழக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தொடரை எத்தனை நாள் நடத்துவது என 9ம் தேதி முடிவு செய்யப்படும்.இது தொடர்பாக பேரவைச் செயலாளர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அடுத்தக் கூட்டத்தை மார்ச் திங்கள்  9ம் நாள், திங்கள்கிழமை, காலை 10.00 மணிக்கு, சென்னை-9, தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்கள் கூட்டியுள்ளார்கள். எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories: