திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் சாகுபடி செய்யப்பட்ட சம்பா நெற்பயிர்கள் அனைத்தும் அறுவடைக்கு வந்துள்ள நிலையில் பெரும்பாலான இடங்களில் இயந்திரங்களை கொண்டு அறுவடை நடைபெற்று வருகிறது. இவ்வாறு ஒரே நேரத்தில் இயந்திரத்தை கொண்டு அறுவடை செய்யப்படும் நெல் மூட்டைகள் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு விவசாயிகள் கொண்டு வருகின்றனர். இந்நிலையில் திருவாரூர் அருகே வண்டாம்பாளையத்தில் இயங்கி வரும் அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் கொண்டு சென்ற நெல் மூட்டைகள் அனைத்தும் கடந்த 4 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யப்படாமல் மலைபோல் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கொள்முதல் நிலைய ஊழியர்களிடம் விவசாயிகள் கேட்டபோது சாக்கு இல்லை என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. கடந்த 21ம் தேதி முதல் நேற்று வரையில் (இடையில் ஞாயிறு விடுமுறை தவிர) நெல் கொள்முதல் நடைபெறாததால் ஆத்திரமடைந்த விவசாயிகள் கொள்முதல் நிலைய ஊழியர்களை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.