லக்னோ: பாலியல் பலாத்கார வழக்கில் தண்டனை கிடைக்கப் பெற்றதால், பாஜ எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.உத்தரப் பிரதேச மாநிலத்தின் உன்னாவ் கிராமத்தை சேர்ந்த இளம்பெண், கடந்த 2017ல் பங்கமாரு தொகுதி பாஜ எம்எல்ஏ குல்தீப் சிங் செங்காரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பரிந்துரையின்படி, டெல்லி மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் செங்கார் பாஜ.வில் இருந்து நீக்கப்பட்டார்.இந்த வழக்கை விசாரித்த டெல்லி மாவட்ட நீதிமன்றம் பாலியல் பலாத்கார வழக்கில், போக்சோ சட்டத்தின் கீழ் குல்தீப் சிங் செங்கார் குற்றவாளி என அறிவித்து, ஆயுள் தண்டனை, ₹25 லட்சம் அபராதம் விதித்து கடந்தாண்டு டிசம்பர் 20ம் தேதி உத்தரவிட்டது. இந்த ஆயுள் தண்டனையை எதிர்த்து, செங்கார் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கை டெல்லி உயர் நீதிமன்றம் மே 4ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.
இந்நிலையில், இது தொடர்பான வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், `‘உன்னாவின் பங்கமாரு தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏ. குல்தீப் சிங் செங்கார், டெல்லி நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தகுதி நீக்கம் செய்யப்படுகிறார். இந்த தகுதி நீக்கம் ஆயுள் தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்ட 2019 டிசம்பர் 20 முதல் செல்லுபடியாகிறது. இதனால், உன்னாவ் மாவட்டத்தின் பங்கமாரு தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்படுகிறது’’ என்று கூறப்பட்டுள்ளது.