புனே: கடந்த 2018ம் ஆண்டு புனே அருகே பீமா-கோரேகாவில் நடைபெற்ற கலவரம் தொடர்பான வழக்கில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை நேரில் அழைத்து விசாரிக்க விசாரணை கமிஷன் முடிவு செய்துள்ளது. கடந்த 2018 ஜனவரி 1ம் தேதி பீமா-கோரேகாவ் யுத்தத்தின் 200வது வெற்றி தின கொண்டாட்டம் நடைபெற்றபோது அந்த பகுதியில் பயங்கர கலவரம் வெடித்தது. அதற்கு முந்தைய நாளான 2017 டிசம்பர் 31ம் தேதி நடைபெற்ற எல்கார் பரிஷத் மாநாட்டில் பங்கேற்ற இடதுசாரி பிரமுகர்கள் வன்முறையை தூண்டும் வகையில் பேசியதுதான் இந்த கலவரத்துக்கு காரணம் என்று புனே போலீசார் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த கலவரம் குறித்து விசாரணை நடத்துவதற்காக முன்னாள் மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி ஜே.என்.பட்டேல் தலைமையிலான இரண்டு உறுப்பினர்களை கொண்ட விசாரணை கமிஷன் ஒன்றை முந்தைய தேவேந்திர பட்நவிஸ் தலைமையிலான பாஜ அரசு அமைத்தது. தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கடந்த பிப்ரவரி 18ம் தேதி செய்தியாளர்களை சந்தித்தபோது, வலதுசாரி தலைவர்கள் மிலிந்த் ஏக்போடே மற்றும் சம்பாஜி பிடே இருவரும் பீமா-கோரேகாவில் கலவரம் ஏற்படுவதற்கான ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தியதாக குற்றம்சாட்டினார்.