புதுடெல்லி: தமிழகத்தில் ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவு வெளியிட தடை நீக்கம் தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் இன்று விசாரிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைக்கு நடந்த தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.அப்பாவு, அ.தி.மு.க சார்பில் ஐ.எஸ்.இன்பதுரை போட்டியிட்டனர். இதில், இன்பதுரை 69 ஆயிரத்து 590 வாக்குகளையும், எம்.அப்பாவு 69 ஆயிரத்து 541 வாக்குகளையும் பெற்றனர். இதையடுத்து 49 வாக்குகள் வித்தியாசத்தில் இன்பதுரை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.இன்பதுரையின் வெற்றியை எதிர்த்து தி.மு.க வேட்பாளர் அப்பாவு சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், கடைசி மூன்று சுற்று வாக்குகள் மற்றும் தபால் வாக்குகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டதோடு, அவற்றை எண்ணியும் முடித்துள்ளது. ஆனால், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக, இன்பதுரை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை விசாரித்த நீதிமன்றம், வாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டது.