×

நானும் விவசாயிதான் என்று மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்லும் எடப்பாடி பழனிசாமி விவசாயிகளுக்காக என்ன செய்தார்?: திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு கேள்வி

சென்னை: நானும் விவசாயி தான் என்று மூச்சுக்கு  முன்னூறு தடவை சொல்லும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி விவசாயிகளுக்காக என்ன செய்தார் என்று திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு கேள்வி எழுப்பியுள்ளார்.திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, எம்.எல்.ஏ. வெளியிட்ட அறிக்கை:முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தனது ஊழல்களை, லஞ்ச லாவண்யத்தை, கையாலாகாத்தனத்தை மறைப்பதற்காக ‘நானும் ஒரு விவசாயி’ என்று தினமும் புலம்பி வருகிறார். பச்சைத் துண்டு போட்டுக் கொண்டு நடிக்கிறார். தமிழ்நாட்டு  விவசாயத்தைச் சிதைக்கும் ஏராளமான திட்டங்களுக்கு பச்சைக் கொடி காட்டி வரவேற்பு கொடுத்து வந்த பழனிசாமி, பச்சை துண்டு போட்டுக் கொண்டு தன்னை விவசாயியாக காட்டிக் கொள்வது பச்சைத் துரோகம் என்று மதுரையில் நடந்த  மாபெரும் பொதுக்கூட்டத்தில் திமுக தலைவரும்-எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார்.

உடனே பழனிசாமிக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்துவிட்டது. சேலத்தில் நடந்த ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசியவர் ‘மு.க.ஸ்டாலின் விவசாயிகளை கொச்சைப்படுத்திவிட்டார்’ என்று பேசி இருக்கிறார். திமுக  தலைவர், விவசாயிகளைக் கொச்சைப்படுத்தி பேசவில்லை. நானும் விவசாயி தான் என்று எடப்பாடி சொல்லிக் கொள்வதன் மூலமாக விவசாயிகளை அவர் கொச்சைப்படுத்தக் கூடாது என்பதுதான் திமுக தலைவரின் குற்றச்சாட்டு. ‘‘இது மம்பட்டி பிடித்த கை, ஏரோட்டிய கை, சேற்றில் மிதித்த கால்’’ என்று ‘‘நானும் ரவுடி தான்’’ பாணியில் சேலத்தில் பேசி இருக்கிறார் பழனிசாமி. நானும் விவசாயிதான் என்று மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்லும் அவரது ஆட்சி  காலத்தில் விவசாயிகள் அடைந்த நன்மை என்ன? அவர் விவசாயிகளுக்காக என்ன செய்தார்?. எட்டு வழிச் சாலைக்காக  விவசாயிகளின் விளைநிலங்களை பறித்து- சேலத்தில் விவசாயிகள் மீது தடியடி நடத்தி- இரவோடு இரவாக பிடித்து சிறையில் தள்ளியது யார்? ஹைட்ரோ கார்பன் திட்டங்களை அனுமதித்து-காவிரி டெல்டாவை  பாலைவனமாக்க மத்திய பா.ஜ. அரசுடன் துணை நின்று-இப்போது விவசாயிகளை ஏமாற்ற ‘பல் இல்லாத ஒரு சட்டத்தை’ கொண்டு வந்து நாடகம் போடுவது யார்? தங்கள் மண்ணை காப்பாற்ற போராடிய விவசாயிகள் மீது தேச விரோத  சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தது- தடியடி நடத்தியது எல்லாம் யார்? விவசாய நிலங்களில் உயர் மின்கோபுரங்களை அமைத்து- விவசாயிகளின் வேளாண் நிலத்தை சிதைத்து சின்னாபின்னப்படுத்தியது யார்? - எல்லாமே சாட்சாத்  முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமிதான்.

மண் வெட்டியைப் பிடித்து விவசாயிகளின் வாழ்க்கையைத் தான் வெட்டினார். குடிமராமத்து பணி உள்ளிட்ட அனைத்திலும் ஊழல் செய்வதற்கு கையெழுத்துப் போட்டதால் அவரது கையில் ஊழல் கறை  தான் இருக்கிறதே தவிர, நிலத்து மண் இல்லை. அவரது  கால் கழனிகளில் உள்ள சேற்றில் படவில்லை.  ஊழல் சேற்றில் மூழ்கி கிடக்கிறது. அதுவும் எடுக்க முடியாத அளவுக்கு புதையுண்டு போய்க்கொண்டு இருக்கிறது. அதில் இருந்து  தப்பிப்பதற்காக ‘‘நானும் விவசாயி’’ என்று வேஷம் போட்டுக் கொள்ளத் தொடங்கி இருக்கிறார். ஒரு ஊழல்வாதி, தன்னை விவசாயி என்று சொல்லிக் கொள்வதை தமிழ்நாட்டு விவசாயிகள் விரும்பவில்லை. ஏற்கனவே விவசாயிகளின்  வாழ்க்கை நொந்து நூலாகிக் கொண்டிருக்கிறது. அதில் இவரது பேச்சு மட்டுமல்ல, விவசாயி வேஷமும் அருவருப்பாக இருக்கிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Edapadi Palanisamy ,Edappadi Palanisamy ,KN Neru ,DMK , Breathless ,farmer, Edapadi Palanisamy,DMK, chief secretary, KN Neru
× RELATED இரட்டை இலை சின்னம் கோரி தேர்தல்...